கோவை மாநகராட்சி 55-ஆவது வார்டுக்கு உள்பட்ட செங்காடு பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி வடக்கு மண்ட ல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
கோவை மாநகராட்சி 55-ஆவது வார்டுக்கு உள்பட்ட செங்காடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஆழ்துளைக் கிணற்றில் இருந்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
இதனால் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எங்கள் பகுதிக்கு வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்தி, தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாக்கடைகளை முறையாக தூர்வார வேண்டும் என்றனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.