கோவை, காந்திபுரம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை, சரவணம்பட்டி இ.பி.காலனியை சேர்ந்தவர் முகம்மது இலியாஸ் (30). இவர் தனது மனைவி ரபைதுன் பைசியா (30), மகன் முஸ்தபா (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தார். காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில், பின்னால் அமர்ந்திருந்த ரபைதுன் பைசியா, முஸ்தபா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முஸ்தபா உயிரிழந்தார்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.