அன்னூர், சொக்கம்பாளையம் கிராமத்தில் குடிநீர்க் குழாய் மீது தனியார் லே-அவுட்டை சேர்ந்தவர்கள் சாக்கடை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அன்னூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சொக்கம்பாளையம் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்று தனியார் லே-அவுட் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் சாலைகள், சுற்றுச்சுவர், சாக்கடை ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
அன்னூர்-சொக்கம்பாளையம் செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சொக்கம்பாளையம் மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர்க் குழாய் செல்கிறது. அந்தக் குழாய் மீது தனியார் லே-அவுட் உரிமையாளர்கள் சாக்கடை கட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த அன்னூர் காவல் துறையினர், பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், சாக்கடை கட்டும் பணியை உடனடியாக நிறுத்துவதோடு, லே-அவுட்டை சர்வே செய்து அதன் பின்னர் லே- அவுட்டுக்கு சொந்தமான இடத்தில் சாக்கடை அமைக்க உத்தரவிடப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.