கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, பீளமேடு, பாலகுரு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கே.கார்த்திகேயன் (33). இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார். இவர், ஜூன் 16-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு ஈரோடு சென்றுவிட்டார். மீண்டும் 18-ஆம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ. 12 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்:
கோவை, சேரன் மாநகரைச் சேர்ந்தவர் அறிவழகன் (33). இவர், ஜூன் 15-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு பெங்களூரு சென்றுவிட்டார். மீண்டும் அவர் ஜூன் 18-ஆம் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவங்கள் குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.