கார் திருட்டு: கல்லூரி மாணவர்கள்  உள்பட 3 பேர் கைது

கார் திருட்டு வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

கார் திருட்டு வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.
 பொள்ளாச்சி, ஜோதி நகரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், தனது காரை கல்லூரி அருகே ஜூன் 12-ஆம் தேதி நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் காரை காணவில்லை. இதுகுறித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அரவிந்த் புகார் தெரிவித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், உடுமலை சாலையில் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
 விசாரணையில், அவர்கள் பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி நாகூரைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் அருண்குமார் (20), கிணத்துக்கடவை
அடுத்த கோதவாடி சக்திவேல் மகன் சதீஷ்குமார் (19) என்பதும், இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.   அவர்களுடன், பொள்ளாச்சியை அடுத்த எஸ்.மலையாண்டிபட்டினம் ராஜேந்திரன் மகன் மகாபிரசாந்த் (19) என்பவரும் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
 மேலும், விசாரணையில், அவர்கள் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் தேடப்பட்டு வருவதும் தெரியவந்தது.
 இதையடுத்து, காவல் துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com