தண்ணீர் பந்தல் பகுதியில், மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, விளாங்குறிச்சி சாலை, தண்ணீர்பந்தல் பகுதியில், மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடை அமைந்துள்ளது. எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.