அரசுப் பள்ளிகளைப்போல, சி.எஸ்.ஐ. பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்க வேண்டும் என தென்னிந்திய திருச்சபை கூட்டுக் கல்விக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கூட்டுக் குழுவின் சார்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:
அரசுப் பள்ளிகளைப்போல, சி.எஸ்.ஐ. பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கவும், தமிழ் வழிப் பாட ஆசிரியர்களை ஆங்கில வழிப்பாட வகுப்புகளுக்கும் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் கால நீட்டிப்பு வழங்க வேண்டும். காலியாக உள்ள அமைச்சுப் பணியிடங்களான இளநிலை உதவியாளர், அலுவலக ஊழியர், இரவுக் காவலர், தோட்டப் பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அறிவியல் உபகரணங்கள் வழங்குவது போன்ற அரசின் நலத் திட்டங்களை, நிதியுதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளைப்போல, ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கும் விலையில்லா பாட நூல்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கு ஆர்.எம்.எஸ்.ஏ. மற்றும் எஸ்.எஸ்.ஏ. திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி உதவிகளை, எமது பள்ளிகளுக்கும் முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.