கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 325 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.இன்னாசிமுத்து தலைமை வகித்தார். இதில், கடந்த 33 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 1,500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, வரையறுக்கப்பட்ட மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக் கொடையாக ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 300 பெண்கள் உள்ளிட்ட 325 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.