கோவை மாவட்டம், சிறுமுகையை அடுத்த பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு காட்டெருமைகள் உயிரிழந்தன.
சிறுமுகையை அடுத்த கூத்தாமண்டி பிரிவில் சிறுமுகை வனச் சரகர் மனோகரன் தலைமையில் வனவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் இரண்டு காட்டெருமைகள் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு வந்த இரும்பறை கால்நடை மருத்துவர், உயிரிழந்த காட்டெருமைகளின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனை செய்தார்.
இதுகுறித்து சிறுமுகை வனச் சரகர் மனோகரன் கூறியதாவது:
பவானிசாகர் அணைக்கு நீர் அருந்த வந்த இரண்டு ஆண் காட்டெருமைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் இரண்டும் இறந்திருக்கலாம். இரண்டு காட்டெருமைகளின் சடலங்களும் அப்பகுதியில் புதைக்கப்பட்டன என்றார்.