தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வலியுறுத்தி, கல்லூரிக் கல்வி மண்டல இயக்குநர் அலுவலகத்தில் மதிமுகவினர் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் தலைமையில் அக்கட்சியினர் சிலர், கோவை பந்தயச் சாலை பகுதியில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில் அளித்த மனு:
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்களை விநியோகம் செய்து, பூர்த்தி செய்து அளிக்க குறைந்தபட்சம் 10 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டிய நிலையில், பல கல்லூரிகளில் இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துள்ளனர்.
இந்த நடைமுறையால் விரும்பிய கல்லூரியில், விரும்பிய இடம் கிடைக்காததால் பெற்றோருக்கும், மாணவருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களுக்கு தகுந்தாற்போல், விரும்பும் கல்லூரிகளில் இடம் பெறவும், கலை, றிவியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பித்து, பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு இருப்பதைப் போன்று மாணவர் சேர்க்கையை நடத்த, கல்லூரிக் கல்வி இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.