காவிரி ஆற்றுப்படுகையின் அருகே உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் லாரிகளில் மணல் ஏற்றுவதைத் தடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மணல் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அச்சங்கத்தின் செயலர் ஏ.சந்திரிகா மணி அனுப்பியுள்ள மனு:
மணல் குவாரிகளைத் தமிழக அரசே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பை கோவை, திருப்பூர் மாவட்ட மணல் வியாபாரிகள் சங்கம் வரவேற்கிறது. அதேநேரம், அந்த குவாரிகள் எவ்வாறு செயல்பட்டால், இந்தத் திட்டம் சிறப்பாகத் தொடரும் என்பதை அரசுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதன்படி, தமிழக அரசு மேலும் 25 இடங்களில் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும். அவற்றின் மூலம் லாரிகளில் 2 யூனிட் மணல் மட்டுமே ஏற்ற அனுமதிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக காவிரி ஆற்றுப்படுகையின் அருகே உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் ஏற்றப்படுகிறது. பிற பகுதிகளைச் சேர்ந்த லாரிகளுக்கு வாரம் ஒரு லோடும், அருகில் உள்ளவர்களுக்கு தினமும் ஒரு லோடும் ஏற்றுவதால் மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், மணலுக்கான தொகையை கேட்பு வரைவோலையாக கேட்பதற்குப் பதிலாக ஆன்லைன், ஸ்வைப் இயந்திரங்கள் மூலம் பெற வேண்டும். கரூரில் சாலையோரங்களில் உள்ள மணல் ஜலிக்கும் இயந்திரங்களில் மோசடி நடைபெறுவதால் அவற்றை அகற்ற வேண்டும். மேலும், காவிரி, அமராவதி கரையோரங்களில் சிறு வாகனங்களில் மணல் ஏற்றி வந்து அவற்றை லாரிகளுக்கு மாற்றி விற்பனைக்கு அனுப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.