வால்பாறையில் 17 மணி நேரம் பி.எஸ்.என்.எல். சேவை முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
வால்பாறைப் பகுதி மக்களில் 90 சதவீதம் பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல, பெரும்பாலான எஸ்டேட் நிர்வாகத்தினர் பி.எஸ்.என்.எல். இணைப்பு வைத்துள்ளனர். வால்பாறைப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்போது, பி.எஸ்.என்.எல். சேவையில் அடிக்கடி துண்டிப்பு ஏற்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 6 மணியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி, நெட்வர்க் சேவை முற்றிலும் இல்லாமல்போனது. சுமார் 17 மணி நேரம் முடங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் தடுமாறினார்கள்.
இதேபோல, எஸ்டேட் பகுதியில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆழியார் பகுதியில் மரம் விழுந்து கேபிள் ஒயர் துண்டிக்கப்பட்டதால் சேவை முடங்கியதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.