குடியிருப்பு அமைத்துத் தரக்கோரி கோவை மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் சமூகநீதிக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜசேகர், தலைமையில் துப்புரவுத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் மாநகரப் பகுதிகள் தவிர பல்வேறு பகுதிகளில் இயற்கைப் பேரிடர் காலங்களில் பணியாற்றி உள்ளனர்.
தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்குத் தற்போது வரை குடியிருப்புகள் அமைத்துத் தரவில்லை. எனவே, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
கோவை, வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சிஎம்சி காலனியில் 400 குடும்பங்கள் மின்சார வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இதேபோல, அதிகாலை நேரத்தில் பணிக்குச் செல்லப் பேருந்து வசதியும் இல்லை. மேலும், இலவசப் பேருந்து வசதியும் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.