சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து அதிக அளவில் ஊற்றியதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகளில் பேரூராட்சி பணியாளர்கள் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் அபேட் கரைசலை கலந்து வருகின்றனர்.
இதில் பணியாளர்கள் சரியான அளவு தெரியாமல் அதிக அளவில் அபேட் கரைசலை தொட்டிகளில் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலருக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதில் கண்ணம்பாளையம் பேரூராட்சி 11-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ் மகன் பாலச்சந்திரன்(5), அதே பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் மகள்கள் ரீமா(5), ரெஜினா(3) உள்ளிட்டோருக்கு ஒவ்வாமையால் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பணியாளர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்காததாலேயே அதிகமான அபேட் கரைசலை தொட்டிகளில் கலந்து வருகின்றனர். அபேட் மருந்து கலந்த தண்ணீரை பயன்படுத்தும் பொழுது உடலில் அரிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதுபோன்று முறையாகப் பயிற்சி பெறாத பணியாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றனர்.