பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு ஆதரவற்றோர் நல இல்லங்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினர்.
இப்பள்ளியின் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இலவசமாக வழங்கிட தங்களால் இயன்ற பொருள்களை வழங்கிட வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து அப்பள்ளியில் படிக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் புதிய ஆடைகள், உணவுப் பொருள்கள் போன்ற பல்வேறு வகையான பொருள்களை வழங்கினர். இப்பொருள்களை நல இல்லங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் முதல்வர் சித்ரா செளந்திரராஜன் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து நிழல் மையம், ஜீவகாருண்யா ஆஸ்ரமம், வாராஹி மணிகண்ட ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகிய தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் மாணவர்கள் வழங்கிய பொருள்களை அளித்தார். துணை முதல்வர் இந்திரா நன்றி கூறினார்.