அன்னூர் ஒன்றியம், மூக்கனூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவர் உயிரிழந்ததையடுத்து, பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அன்னூர் ஒன்றியம், வடக்கலூர் ஊராட்சி, மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சுதர்சன்(14). இவர், ஆணையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவருக்கு, நவம்பர் 11-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு திங்கள்கிழமை சுதர்சன் உயிரிழந்தார்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள், டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தாததைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னூர் வட்டாட்சியர், அன்னூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, விஜயராணி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.