கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்பு தினமாக கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குப்பைகளை சுத்தம்படுத்தும் பணியை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் தொடர்ச்சியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களை கொண்டு தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் 1,000 பேரும், பேரூராட்சிகளில் 800 பேரும், கிராம ஊராட்சிகளில் 450 பேரும் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தேவையற்ற விடுமுறையை தவிர்த்து டெங்கு ஒழிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி ஆட்சியர் சரண்யா ஹரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பானுமதி, மாநகராட்சி மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.