கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சரவணம்பட்டி பகுதியில் முறையான குடிநீர் விநியோகிக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சரவணம்பட்டி பகுதியில் 28, 29, 30, 31 ஆகிய வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சீராக குடிநீர் விநியோகிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து சரவணம்பட்டி திமுக பகுதிச் செயலாளர் மாணிக்கம், பேரூராட்சி முன்னாள் தலைவர் கதிர்வேல், மாமன்ற முன்னாள் உறுப்பினர் மாரிசெல்வன் ஆகியோர் தலைமையில் சரவணம்பட்டியில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
இத்தகவலறிந்து வந்த சுகாதார ஆய்வாளர் தனபால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், இதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.