மேட்டுப்பாளையத்தை அடுத்த சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இங்குள்ள மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால் உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிப் பகுதி முழுவதும் சுகாதார மேம்பாட்டுப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தாற்காலிக முகாம் அமைக்கப்பட்டு கிராம மக்களின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஊராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் புதன்கிழமை ஆய்வு செய்தார். மின்வாரிய குடியிருப்பு, கரட்டுமேடு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர், அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் கஷாயம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பத்மாவதி, வட்டாட்சியர் ரங்கராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால், ரவிச்சந்திரன், ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.