சூலூர் அருகே விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், மகளிர் கூட்டமைப்பின் தலைவர் ஜெயமணி, அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. ஆனால், இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விலையில்லா ஆடுகளுக்கான பயனானிகள் தேர்வில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், செலக்கரச்சல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த சூலூர் காவல் உதவி ஆய்வாளர் ரவீந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இதுதொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை சிறப்புக் கூட்டம் கூட்டி விலையில்லா ஆடுகள் பெரும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும், அதில், தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனர்.