பெங்களூருவில் இருந்து கோவைக்கு பேருந்தில் கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அதே பகுதியில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் ஜீவானந்தம் (27), சேகர் (49) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தியாகராஜன் இவர்கள் இருவரிடமும் இரண்டரை கிலோ தங்க நகைகளைக் கொடுத்து பெங்களூருவில் விற்பனை செய்து விட்டு வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, அரை கிலோ தங்க நகைகளை விற்பனை செய்துவிட்டு 2 கிலோ தங்க நகைகளுடன் பெங்களூருவில் இருந்து அரசு விரைவுப் பேருந்தில் புதன்கிழமை இரவு கோவை திரும்பியுள்ளனர்.
கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை பேருந்து வந்தடைந்தது.
அப்போது, ஜீவானந்தம், சேகர் ஆகியோர் கண் விழித்து பார்த்தபோது அவர்கள் கொண்டு வந்த நகைப் பை காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தியாகராஜனைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பேருந்தில் கொண்டு வரப்பட்ட நகைகள் திருடுபோனது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தியாகராஜன் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜீவானந்தம், சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.