பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தொழில்நுட்பப் போட்டிகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள வட்டார வளமையத்தில் அண்மையில் நடைபெற்றன.
மாணவர்களிடையே கணினி அறிவியல் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆர்வத்தை உருவாக்கி விஞ்ஞானத் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் நடுநிலைப் பள்ளிகளில் டெக்னோ கிளப் அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
இதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தா.பிளாரன்ஸ் முன்னிலையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரக் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொன்.தன்ராஜ் தொடக்கிவைத்தார்.
40 பள்ளிகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்று கணினியில் ஓவியங்கள் வரைதல், மைக்ரோ சாப்ட் மென்பொருளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை செய்து காண்பித்தனர்.
இதில், சிறந்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியப் பயிற்றுநர்கள் வளர்மதி, தமிழ்ச்செல்வி, ஜாஸ்மின், அம்சவேணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.