சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் ஆணையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15 ) நேரில் விசாரணை நடத்துகிறார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூர் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்தும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் விசாரணை நடத்த வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியை ஒருநபர் விசாரணை குழுவாக தமிழக அரசு நியமித்துள்ளது.
இதன்படி, ஒருநபர் குழுவின் ஆணையரான ககன்தீப் சிங் பேடி கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை நடத்துகிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு விபத்து குறித்து தங்களது கருத்துகளை விசாரணைக் குழுவிடம் நேரிலோ அல்லது மனுவாகவோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.