கோவையில் மது போதையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டது தொடர்பாக ஆயுதப்படைக் காவலர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை, மரக்கடை தியாகராய வீதியில் புதன்கிழமை காவலர் ஒருவர் சீருடையில் நின்று இருசக்கர வாகனங்களை தடுத்து, ஓட்டுநர்களிடம் அசல் ஓட்டுநர் உரிமம் கேட்டுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வானகத்தில் வந்த கல்லூரி மாணவரை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது, காவலர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மாணவர் மாநகர நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்ததால் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், அவர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வரும் கார்த்திக் (39) என்பது தெரியவந்தது.
இவர் சில நாள்களுக்கு முன்னர் வரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மாநகரக் காவல் துறை சார்பிலான விசாரணை அறிக்கை, உயர் நடவடிக்கைக்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் பேரில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி உத்தரவிட்டார்.