கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதி உடல்நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர், காங்கயம் சாலையில் உள்ள ராக்கியாபாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (83). இவர், மனைவியைக் கொலை செய்த வழக்கில் கடந்த 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன்பின், 2009-ஆம் ஆண்டு திருப்பூர் விரைவு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கோவை மத்தியச் சிறையில் ராமசாமி அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 7 ஆண்டுகளாகவே நுரையீரல் நீர்த்தொற்று நோயால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், சிறையில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 13-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், ராமசாமி சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து, சிறைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 நாள்களில் 5 பேர் சாவு: கோவை மத்தியச் சிறையில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை 5 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தனரா அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்தனரா என்பது குறித்து
காவல் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என சக கைதிகள் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.