பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 8 மாடியில் புதிய கட்டடம் விரைவில் கட்டப்பட உள்ளதாக சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர்
கஸ்தூரிவாசு, நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கண்ணன், தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், நோயாளிகள் நலச் சங்க நிர்வாகிகள் மருத்துவர்கள் கணபதி, தங்கமுத்து, வெள்ளைநடராஜ், மெக்ஸன் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விரைவில் 8 மாடிக் கட்டடம் கட்டப்படவுள்ளது. முதல் கட்டமாக 5 மாடிகள் கட்ட ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலம் அனைத்தும் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு, விரைவில் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கும்.
மருத்துவமனை வளர்ச்சிக்காக இந்த ஆண்டு மட்டும் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அரசுக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக ஆண்டுக்கு ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்றார்.