போத்தனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ. 25 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வெள்ளலூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், வழக்கம்போல வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றபோது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் மற்றும் 2 ஏடிஎம் அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.