தள்ளுவண்டிக் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளலூரில் தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தக் குடியிருப்பில் நூற்றுக்கணக்கான தள்ளுவண்டி வியாபாரிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் குடியிருப்பு மற்றும் அதன் அருகே தள்ளுவண்டிகளை வைத்தும் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில், தள்ளுவண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்ய மாநகராட்சி அனுமதி மறுத்து, காவல் துறையினரின் உதவியுடன் கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி தள்ளுவண்டி வியாபாரிகள் குடிசை மாற்று வாரியம் அலுவலகம் அருகே திங்கள்கிழமை குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தள்ளுவண்டிக் கடை மூலமாகத் தங்களது வாழ்வாதாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் காவல் துறையினரிடன் உதவியுடன் தள்ளுவண்டிகளை நிறுத்தி தொழில் செய்யக் கூடாது எனக் கூறி கடைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே தள்ளுவண்டிகளை நிறுத்தி தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.