கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக சுற்றுவட்டார 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேக்கம்பட்டியில் நடைபெற இருக்கும் கோயில் யானைகளுக்கனான புத்துணர்வு முகாமினால் விளைநிலங்கள் சேதப்படுவதாகக் கூறி, விவசாயிகள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான தாசம்பாளையம், தேக்கம்பட்டி, தாசனூர், நெல்லித்துறை, ஜென்டேபாளையம்பாளையூர் மங்கலகரை தொட்தாசனூர் உள்ளிட்ட 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் சார்பில் காரமடையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு 23 கிராமங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட மாணவர் அணி துணைஅமைப்பாளர் மேடூர் கணேசன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், பொது குழு உறுப்பினர் பி.ஆர். ரங்கராஜன், மதிமுக பி.க.நடராஜ், அவைத் தலைவர் பி.எம் ரங்கராமி, கம்யூனிஸ்ட் பெருமாள், பாஜக செந்தில்குமார், தேமுதிக நாகராஜ்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், வரும் 14ஆம் தேதி யானைகள் முகாம் நடைபெறும் இடத்தை சுமார் 2 ஆயிரம் பேருடன் முற்றுகையிடுவது, 23 கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றி யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.