கோவை மாநகர காவல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த துப்பறியும் நாய் அம்மு உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் 7 நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. மேலும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மோப்ப நாய்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதேவேளையில் முதுமை காரணமாக டயானா, அம்மு, சாரு ஆகிய நாய்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில், உடல்நலக் குறைவு காரணமாக அம்மு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
இதையடுத்து, அம்முவுக்கு மலர் வளையம் வைத்து காவல் துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
கால்நடை மருத்துவர்களின் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அம்முவின் உடல் அதே பகுதியில் புதைக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறையில் 2008-ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்த அம்மு 119 கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. உதகை, கோவையில் நடந்த நாய்க் கண்காட்சியில் பல்வேறு பரிசுகளையும் அம்மு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.