போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும்வகையில் பாரதி நகர், சாந்தி நகர் இடையே ரயில்வே உயர்நிலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தற்போது கூடுதலாக மூன்று இருப்புப் பாதை மற்றும் உயர்நிலை நடைமேடை உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரின் கிழக்குப் பகுதிகளிலிருந்து மேற்கு பகுதிக்கு வரும் மக்கள், மூன்று இருப்புப் பாதைகளைக் கடந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கவும், பொதுமக்கள் வசதிக்காகவும் பாரதி நகரிலிருந்து ரயில்வே பாதையைக் கடந்து சாந்திநகர் பகுதிக்குச் செல்ல ரயில்வே உயர்நிலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
இந்த ரயில்வே உயர்நிலை மேம்பாலம் அமையும்பட்சத்தில் மேட்டுப்பாளையம் நகரம், கோவை சாலை, பாரதி நகர் பகுதி மற்றும் சாந்திநகர், மணிநகர், காட்டூர், வசந்தம் நகர், பசுவையா நகர், தாசம்பாளை யம், குரும்பனூர், கிட்டாம்பாளையம், பாயப்பனூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், வனபத்ர காளியம்மன் கோயில், மகாதேவபுரம் வழியே உதகை சாலை பகுதிகளுக்கும் செல்ல எளிதில் பாதை ஏற்படும். இந்த பாலத்தினால் நகரப் பேருந்து நிலையப் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலும் வெகுவாகக் குறையும் நிலை ஏற்படும்.
எனவே, இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 16-ஆம் தேதி மாலை சாந்திநகர் முனியப்பன் கோயிலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பொது மக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.