பொள்ளாச்சி-கோவை சாலையில் அசுர வேகத்தில் இயங்கிய தனியார் பேருந்து: ஓட்டுநர் மீது வழக்கு

கோவையில் இருந்து பொள்ளாச்சி வந்த அரசுப் பேருந்து மீது அசுர வேகத்தில் வந்து மோத முயன்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

கோவையில் இருந்து பொள்ளாச்சி வந்த அரசுப் பேருந்து மீது அசுர வேகத்தில் வந்து மோத முயன்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
கோவை உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசுப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை மாலை  புறப்பட்டது. அரசுப் பேருந்து கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில்  தனியார் பேருந்தும் புறப்பட்டது. அப்பேருந்தை அதன் ஓட்டுநர் தொடர்ந்து அசுரவேகத்தில் இயக்கி, அரசுப் பேருந்து மீது மோதுவது போல வந்துள்ளார். உக்கடத்தில் இருந்து தொடர்ந்து கிணத்துக்கடவு அருகே ஏழூர் பிரிவு வரும் வரை தனியார் பேருந்து ஓட்டுநர், அரசுப் பேருந்தை இயக்கவிடாமல், மோதுவது போலவும், தாறுமாறாகவும் இயக்கியதாகக் கூறப்படுகிறது.                                                                                        மேலும், ஒவ்வொரு நிறுத்தத்திலும் முந்திச் சென்று பயணிகளை ஏற்ற முயல்வது போலச் செயல்பட்டுள்ளார். உக்கடத்தில் இருந்தே அரசுப் பேருந்தில் வந்த பயணிகள் அச்சமடைந்த நிலையில், ஏழூர் பிரிவு வரும் போது அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர். அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவே, அதில் இருந்த பயணிகள் இறங்கி தனியார் பேருந்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தனியார் பேருந்தில் வந்த பயணிகளும், அரசுப் பேருந்தில் வந்த பயணிகளுடன் சேர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்                                 அறிந்த கிணத்துக்கடவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். 
இதையடுத்து, தனியார் பேருந்து ஓட்டுநரான வால்பாறையைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) மீது அதிக வேகத்தில் பேருந்து இயக்கியதாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஓட்டுநர் சதீஷ்குமாரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதே ஓட்டுநர் கடந்த டிசம்பர் மாதம் பொள்ளாச்சி-கோவை சாலையில் அதிவேகத்தில் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது, நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 3 மாணவிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 
பொள்ளாச்சி-கோவை சாலையில் தனியார் பேருந்துகள்அதிவேகத்தில் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது.  மேலும்,  பேருந்து நிலையத்துக்குள் வரும்போதும், வெளியேறும்போதும் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால், விபத்துகள் பெருமளவில் நிகழ்கின்றன. எனவே, இப் பிரச்னையில் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com