அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டதாக தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கிவிட்டது. தமிழகத்தின் கடன் ரூ. 5 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. ஆட்சியாளர்கள் ஊழல் செய்துவிட்டு அந்த சுமையை மக்கள் மீது திணிக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் சொல்லிக் கொள்ளும் விதமாக எந்தத் திட்டமும் இல்லை. மக்கள் அனைவரும் ஆட்சி மீது கடுமையான கோபத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர் என்றார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண் என்று கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, மதத்தால் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என்றார் அவர்.