ஆனைமலை தர்மராஜா திரௌபதியம்மன் கோயில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.
ஆனைமலை தர்மராஜா திரௌபதியம்மன் கோயில் குண்டம் விழாவை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை சர்க்கார்பதி பகுதியில் இருந்து 104 அடி மூங்கில் கொடி மரம் பக்தர்களால் வெட்டி எடுத்து வரப்பட்டு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு புதன்கிழமை காலை 9 மணியளவில் கோயில் வளாகத்தில் கொடி மரம் நிலை நிறுத்தப்பட்டது. குண்டம் விழாவை முன்னிட்டு தர்மராஜா திரௌபதியம்மனுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற
உள்ளன.
வரும் 26-ஆம் தேதி காலை திருமஞ்சன நிகழ்ச்சி, இரவு கண்ணபிரான் தூது, சுவாமி புறப்பாடு, குண்டத்து காட்டில் விஷ்வரூப தரிசனம் ஆகியன நடைபெறவுள்ளன.
மார்ச் 1-ஆம் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், நள்ளிரவு அரவான் சிரசு ஊர்வலம், 2-ஆம் தேதி காலை குண்டம் கட்டுதல், மாலை பெரிய தேர் வடம் பிடித்தல், இரவு குண்டத்தில் பூ வளர்த்தல் ஆகியன நடைபெறவுள்ளன. மார்ச் 3-ஆம் தேதி காலை 9 மணியளவில் குண்டம் இறங்குதல் நடைபெறவுள்ளது.
4-ஆம் தேதி தேர் நிலை நிறுத்தம், மாலை ஊஞ்சல் பட்டாபிஷேகம், 5-ஆம் தேதி மஞ்சள் நீராடுதல், இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைய உள்ளது.