கோவை, ஈச்சனாரி அருகே லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(30). இவர், கோவை, வெள்ளலூரில் அறை எடுத்துத் தங்கி மதுக்கரை மார்க்கெட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், பணிக்குச் செல்வதற்காக ஈச்சனாரி பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கோவை மாநகரப் போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸார், லாரி ஓட்டுநரான மோகன்குமார் (35) என்பவரைக் கைது செய்தனர்.