சூலூர் அருகே தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மகள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சூலூர் அருகே, சுல்தான்பேட்டை, அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மாகாளி (76). இவர், தனது வீட்டில் படுத்து உறங்கியபோது வியாழக்கிழமை இரவு வாந்தி எடுத்துள்ளார். அருகில் இருந்த அவரது மகள் குழந்தையம்மாள் அதைப் பார்த்துள்ளார். அப்போது அவரது தலையில் காயம் இருந்துள்ளது. இதையடுத்து, அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், வழியிலேயே மாகாளி இறந்துவிட்டார்.
இதுகுறித்து குழந்தையம்மாள் அளித்த புகாரின்பேரில் சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.