கோவையில் ஜனவரி 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த கோயம்புத்தூர் விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) நிறைவடைந்தது.
கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பில் 10-ஆவது ஆண்டாக நடத்தப்படும் கோயம்புத்தூர் விழா ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கியது. கோவையின் கலாசாரம், பெருமையை உணர்த்தும் வகையில் தினமும் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சிறுதுளி அமைப்பின் சார்பில், அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் சுரேஷ் பாண்டியன், அரவிந்த், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சிறுதுளி அமைப்பின் நிர்வாகி மயில்சாமி, திட்ட இயக்குநர் சரவணகுமார், சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல, கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை குளங்களின் தற்போதைய நிலை எனும் தலைப்பில், போட்டோ பாய்ஸ் என்ற புகைப்படக் கலைஞர்கள் குழுவினருடன் இணைந்து சிறுதுளி அமைப்பு புகைப்படப் போட்டியை நடத்தியது.
இதில் தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்களுக்குப் பரிசளிப்பு விழா சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்றது. சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் சுஜானி பாலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
பொது மக்கள் இந்தப் புகைப்படங்களை புகைப்படங்களை சனிக்கிழமை மாலை 5.30 மணி வரை பார்த்து ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலம்பச் சங்கமம்
கோவை விழாவின் ஒரு பகுதியாக குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் சிலம்பச் சங்கமம் விழா வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.சி.டி., வாசவி, எம்.ஜி.எம். உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று சிலம்பம், சுருள் வாள், கேடய சண்டை, ரிப்பன் சிலம்பம் போன்றவற்றில் ஈடுபட்டனர்.