கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி காலியாக உள்ள நிலையில், பொருளாதாரத் துறைப் பேராசிரியர் பி.வனிதா, பதிவாளர் பொறுப்பை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், பதிவாளர் பதவியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
போதுமான கல்வித் தகுதியுடன் (முதுகலை பட்டம், 15 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம், 50 வயதை நிறைவு செய்த ஆனால் 55 வயதுக்கு மிகாதவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஜனவரி 12-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 12-ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 17-ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.