பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வைணவத் தலங்களில் மார்கழி மாத நிறைவையொட்டி சனிக்கிழமை அதிகாலையில் ஆண்டாள் திருவிளக்குடன் பஜனை கோஷ்டியினர் திருவீதி உலா நடத்தினர்.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில், பட்டாளம்மன், லெகுமியம்மன் திருக்கோயில்கள், திருமலை நாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கோயில் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில்களில் கடந்த 29 நாள்களாக அதிகாலை 4 மணியளவில் திருப்பாவை பஜனை நடைபெற்றது.
தினமும் திருப்பாவையில் உள்ள 30 பாடல்களையும் சேவித்தபடி பாகவத, ஆண்டாள் கோஷ்டியினர் நகர வீதிகளில் வலம் வந்தனர். இந்நிலையில், மார்கழி மாதத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனங்கள் நடைபெற்றன. பின்னர் ஆண்டாளை பல்லக்கில் வைத்து, திருப்பாவை சேவித்தபடி பஜனை கோஷ்டியினர் வீதிகளில் வலம் வந்தனர்.
தொடர்ந்து, அனைவருக்கும் தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம், பட்டாளம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திருவிளக்குடன் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற பஜனையின்போது மங்களம் பாடி மார்கழி உற்சவம் நிறைவு செய்யப்பட்டது.