கோவை, குனியமுத்தூர் பகுதியில் கம்பளி வியாபாரி திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
உ.பி. மாநிலம் சாஹரைச் சேர்ந்தவர் என். சாஹல் (29). இவர் கோவையில் தங்கி கம்பளி வியாபாரம் செய்து வந்தார். குனியமுத்தூர் திருநகர் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஜி.கார்த்திக்ராஜா (23) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சாஹல் ஹோட்டல் எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக்ராஜா மரக் கட்டையால் சாஹலைத் தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு
தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாஹல் உயிரிழந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார்த்திக்ராஜாவைத் தேடிவருகின்றனர்.