கோவை-பெங்களூரு இடையே இருமார்க்கத்திலும் இரவு நேர ரயில் சேவையை துவக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு மதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் அனுப்பிய மனு விவரம்:
கோவை மாவட்டம் தொழில், கல்வி, மருத்துவம், சுற்றுலா ஆகிய துறைகளில் சிறந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. ஆனால், மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் அருகில் உள்ள மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் போதுமான ரயில் போக்குவரத்து வசதி இல்லாத நிலை நீடிக்கிறது.
எனவே, வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பொது நிதிநிலை அறிக்கையின்போது கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும்.
கோவை-பெங்களூரு இடையே இருமார்க்கத்திலும் நாள்தோறும் இரவு நேர ரயில் சேவையை துவக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரத்திற்கு இருமார்க்கத்திலும் நாள்தோறும் இரவு நேர ரயில் சேவை துவக்க வேண்டும்.
இதேபோல் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக ராமேசுவரத்துக்கும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கன்னியாகுமரிக்கும் நாள்தோறும் இரவு நேர ரயில் சேவை துவக்க வேண்டும்.
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு காலை முதல் இரவு வரை இருமார்க்கத்திலும் நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்க வேண்டும். வடகோவை, பீளமேடு ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்தி முக்கிய ரயில்கள் நின்று, செல்ல அறிவிப்பு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.