கோவை அரசு கலைக் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் புதன்கிழமை வரை 1,252 இடங்கள் நிரம்பியுள்ளன.
கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 22 இளநிலை பட்டப் படிப்புகளில் 1,400 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டது. மொத்தம் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட 7,050 விண்ணப்பங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் பெறப்பட்டன.
இதையடுத்து, மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கலந்தாய்வு ஜூன் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 6 நாள்கள் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 1,252 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
பெண்களுக்கான இடங்கள் முழுவதுமாகப் பூர்த்தியாகிவிட்ட நிலையில், ஆண்களுக்கான 156 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. தொடர்ந்து, ஜூன்19-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், ரம்ஜானுக்காக வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டால் அன்று நடைபெறும் கலந்தாய்வு மறுநாளான சனிக்கிழமை நடத்தப்படும் என்றும்,
ஒருவேளை சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெறும் என்றும் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.