பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் நீராதாரத்தை மேம்படுத்தவும், வன விலங்களுக்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யவும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நீர்குழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் வன விலங்குகள்- மனித மோதல்களைத் தவிர்க்கும் வகையில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், வனத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து வனச் சரகர் பழனிராஜா பேசியதாவது:
நடப்பு ஆண்டு கெளசிகா நதியில் 5000 நீர்குழிகளும், 2 இடங்களில் நீர்சேமிப்புத் தடுப்பணைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க பிரச்னைக்குரிய இடங்களில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. யானைகளின் ஊடுவலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய விவசாயிகள் மலையடிவாரக் கிராமங்களில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வனத் துறை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
கூட்டத்தில், ஓசை காளிதாஸ், விவசாய ஆர்வலர்கள் துரைசாமி, சின்னராஜ், பார்த்தசாரதி, வேலுசாமி, பெ.நா.பாளையம், காரமடை ஒன்றியங்களின் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.நடராஜன், கே.மலரவன், அத்திக்கடவு-கெளசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் தினமகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வனவர் கார்த்திக் நன்றி கூறினார்.