குடிநீர்க் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்தாத அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட 2 கட்டடங்களின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.
கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் க.விஜயகார்த்திகேயனின் உத்தரவின்பேரில் மாநகராட்சி மத்திய மண்டலம் 83-ஆவது வார்டுக்கு உள்பட்ட ராஜ வீதியில் வசிக்கும் கே.ஐ.எட்வின் என்பவர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர்க் கட்டணம் மொத்தம் ரூ. 16 ஆயிரத்து 845 செலுத்தாத காரணத்தினால் அவரது கட்டடத்தின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் வார்டு எண் 25-க்கு உள்பட்ட தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமைதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த
வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர்க் கட்டணம் என மொத்தம் ரூ. 27 ஆயிரத்து 796 செலுத்தாத காரணத்தால் அடுக்குமாடிக் குடியிருப்பின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாக்கிழமை துண்டித்தனர்.
பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உடனடியாக செலுத்தவில்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.