முன் விரோதம் காரணமாக நண்பரைத் தாக்கிய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை, அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (30). கோவை, பி.என். பாளையம், பழையூர், சீர்காழி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32). கூலித்தொழிலாளியான இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில், முருகேசனிடம் ரூ. 2 ஆயிரம் கடனாக வினோத்குமார் பெற்றுள்ளார். பின்னர் இந்தப் பணத்தை திருப்பிக் கேட்டும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், பழையூரில் உள்ள தனியார் செல்லிடப்பேசி அலுவலகம் அருகே வினோத்குமார் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான ரவிச்சந்திரன், முத்துக்குமார், தினேஷ் ஆகியோருடன் 2011 ஏப்ரல் 12-ஆம் தேதி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் முருகேசனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வினோத்குமார், ரவிச்சந்திரன், முத்துக்குமார், தினேஷ் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கானது கோவை நீதித்துறை நடுவர் மன்றம் எண் 3-இல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து மாஜிஸ்திரேட் வி.பி.வேலுசாமி புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இதில், ரவிச்சந்திரனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.