தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவையொட்டி, மார்ச் 31-ஆம் தேதி வரையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 39- ஆவது பட்டமளிப்பு விழா ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகத்தால் 2018 மார்ச் 31-ஆம் தேதி வரையில் தேர்வு முடிவுகள் அறிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை படிவத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டேட் வங்கி இணையதள முகவரியில் (CONTROLLER, TNAU, COIMBATORE)
கணக்கில் செலுத்த வேண்டும்.
பட்டங்களை பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளுடன் (அதாவது தாற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழ் (PC) நகல், இறுதி பருவ மதிப்பெண் சான்றிதழின் நகல், இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தப்பட்ட கட்டண ரசீது மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள்) ஜூன் 26 - ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422-6611506 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.