கேரளத்தில் பரவி வரும் நிபா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் கூடிய தனி சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதன் எல்லையில் அமைந்துள்ள கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு சுகாதாரத் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எல்லையோர ஊர்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் நோய்த் தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தொழில், வணிகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கேரள மாநிலத்தில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கேரளத்துக்கும் சென்று வருகின்றனர். நிபா வைரஸ் தொற்று மனிதர்கள் மூலம் பரவும் அபாயம் உள்ளதால் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மதுக்கரையில்...
தமிழக-கேரள எல்லைப் பகுதியான மதுக்கரையில் நிபா வைரஸ் தொடர்பான பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கேரளத்தில் இருந்து வரும் வாகனங்கள் மதுக்கரையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது
மேலும், அப்பாச்சிகவுண்டன்பதி, வாளையாறு, பிச்சனூர், வேலந்தாவளம், ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடியில் கேரளத்திலிருந்து வரும் வாகனங்களில் மருத்துவக் கழிவுகள், உணவுக் கழிவுகள், பழங்கள் கொண்டுவரப்படுகிறதா என சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.