பத்தாம் வகுப்புத் தேர்வில் கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.08 சதவீதம் குறைந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 27 அரசுப் பள்ளிகளில் பயின்ற 1,890 மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியதில் 1,694 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.63 சதவீதம் ஆகும். 675 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 555 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,215 மாணவிகள் தேர்வு எழுதியதில் 1,139 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமலிங்கம் காலனி உயர்நிலைப் பள்ளி, வரதராஜபுரம் உயர்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ராமலிங்கம் காலனி பள்ளியில் தேர்வு எழுதிய 31 மாணவ-மாணவிகளும், வரதராஜபுரம் பள்ளியில் தேர்வு எழுதிய 21 மாணவ-மாணவிகளும் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2017-ஆம் ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.08 சதவீதம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.