கோவை மாநகராட்சி 36ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி கிழக்கு மண்டல உதவி ஆணையரிடம் திமுக வடக்கு மாவட்ட விவசாய அணியினர் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர்(எ) கிருஷ்ணன் தலைமையில் சென்ற முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, மோகன் ரங்கநாதன், நிர்வாகிகள் பொன்னுசாமி, அரசூர் பூபதி, செல்வராஜ் , சித்ரா மணியன், குணசேகரன், விஜயகுமார், வினோத் ஆகியோர் கோவை கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி 36ஆவது வார்டுக்கு உள்பட்ட பூங்கா நகர், பிருந்தாவன் நகர், நேருநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. குடிநீர் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போர்வெல் தண்ணீர் வசதி இல்லாத பகுதிகள் அதிக அளவில் உள்ளது. சாக்கடை பல நாள்களாக முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வேண்டும். விரைவில் சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.