இந்தியத் தர நிர்ணய அமைவனம் சார்பில் உலகத் தர நிர்ணய நாள் விழா கோவையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்தியத் தர நிர்ணய அமைப்பின் கோவை கிளைத் தலைவர் மீனாட்சி கணேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில், கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உயர் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஸ்ரீராம் தேவநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அவர், "சர்வதேசத்தர நிர்ணயம் - 4ஆவது தொழில் புரட்சி' எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, "தற்போது நிகழ்ந்து வரும் 4ஆவது தொழில் புரட்சி மூலமாகப் பல்வேறு துறைகளில் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அதேநேரம், ஏற்கெனவே இருக்கும் பலரது வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இணையதளத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியால் சொந்தமாக ஒரு கார் கூட இல்லாதவர்கள் வாடகை கார் நிறுவனம் நடத்துவதும், சொந்தமாக உணவகம் இல்லாதவர்கள் உணவகம் நடத்துவதும் சாத்தியமாகியுள்ளது. இந்த நவீனத் தொழில் புரட்சிக் காலத்தில் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும். அதை எதிர் கொள்வதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்' என்றார்.
இதில், பெங்களூரு ஐ.பி.எம். இந்தியா நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் சாய்கீதா, தர நிர்ணய அமைப்பின் கோவை கிளை ஆராய்ச்சியாளர்கள் எஸ்.ரினோ ஜான், ஜி.வினித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.